
அரசு திரைப்படக் கல்லூரி முன்னாள் மாணவரான தர்மா, எழுதி இயக்கியுள்ள படம், ‘ஆகக்கடவன’. புதுமுகம் ஆதிரன் சுரேஷ் நாயகனாக நடித்துள்ளார். வின்சென்ட், சி.ஆர். ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ளனர். சாரா கலைக்கூடம் சார்பாக அனிதா லியோ, லியோ வெ. ராஜா தயாரித்திருக்கும் இதற்கு, சாந்தன் அன்பழகன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “நாம் பேசும் வார்த்தைகள் நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கூறும் படமிது. அதை வெறும் கருத்துக்கூறுவதாக இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையோடு, சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லி இருக்கிறோம். இந்த மாதம் வெளியாகிறது” என்றார்.