மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதானவர்களைக் குறிவைத்து அவர்களைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வது கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2020 தொடங்கி 2023 வரை ஈரோடு மாவட்டம் அரச்சலூர், சென்னிமலை மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 5 முதியவர்களைக் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.

இதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயதான தெய்வசிகாமணி, அவரது மனைவியான 74 வயது நிரம்பிய அலமாத்தாள், 44 வயதான மகன் செந்தில்குமார் ஆகிய மூவரின் தலையும் அடித்து நொறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.

அலமாத்தாள் அணிந்திருந்த 6 பவுன் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தை உலுக்கிய இந்தக் கொலைகள் தொடர்பாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

100 நாள்களைக் கடந்தும் இந்தக் கொலை வழக்கில் போலீஸாருக்கு தடயம் ஏதும் கிடைக்காததால், அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார்.

கொலை

குறிவைக்கப்படும் முதியவர்கள்…

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75).

இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவரது மகன் கவிசங்கர் முத்தூரிலும், மகள் பானுமதி சர்க்கரைபாளையத்தில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தோட்டத்தில் தனியாக வசித்து வரும் பெற்றோரைக் கடந்த இரண்டு நாட்களாக மகன் கவிசங்கர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், சந்தேகமடைந்த கவிசங்கர் நேற்று இரவு அருகிலிருந்த உறவினர்களிடம் தனது பெற்றோரைப் பார்க்கச் சொல்லி உள்ளார்.

உறவினர்களான நதியாவும், நல்லசிவமும் ராமசாமி வீட்டுக்குச் சென்றுபார்த்தபோது, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும், ராமசாமி வீட்டுக்குள்ளேயும் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.

தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசிமோகன், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, பெருந்துறை துணைக் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

போலீஸார் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்க வளையல் உட்பட 15 பவுன் நகைகள் கொள்ளை போனது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், வீட்டினுள் பீரோவில் ஏதேனும் நகைகள் கொள்ளை போய் உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

இதுகுறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொலையாளிகளைப் பிடிக்க ஏடிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறோம்.

இப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். தனிப்படைகள் தேடும் பணிகளில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளை நகைக்காகக் கொலை செய்த சம்பவத்திற்கும், தற்போது நடந்துள்ள சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களைக் குறிவைத்து நடைபெறும் கொலைகள் திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *