
தமிழ் நாடக மற்றும் திரைப்பட உலகில் தனது நகைச்சுவை வசனங்களுக்கும், நாடகங்களுக்கும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதற்கும் புகழ்பெற்றவர் கிரேஸி மோகன்.
மறைந்த நடிகரும், எழுத்தாளருமான கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நேற்று (மே1) நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், கே.எஸ் ரவிக்குமார், ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ் ரவிக்குமார், “ கிரேஸி மோகன் சார் என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவரது ஆரம்ப காலங்களில் அவர் சந்தித்த அவமானங்களையும், அவரை பலர் உதாசினப்படுத்தியதையும் என்னிடம் சொல்லி இருக்கிறார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்லுவார்கள், அதன்படி தனது தம்பியை வைத்து அவரது கரியரைத் தொடங்கியதாகச் சொன்னார்.
ஒரு படத்துக்கு வசனம் எழுதச் சொன்னால் நான்கு படத்திற்கு வசனம் எழுதித் தருவார். சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்காகப் பல நாள்கள் காத்திருப்பார். இரவில்தான் வசனங்கள் எழுதுவார். இப்போது இரவில் பணி செய்பவர்கள் என்றால் சிம்பு, ஏ.ஆர். ரகுமான் போன்றோரைச் சொல்கிறார்கள்.

ஆனால், கிரேஸி மோகன் சார் அப்போதே இரவில்தான் வசனங்கள் எழுதுவார். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம். நாங்கள் படம் பண்ணும்போது தினமும் சந்தித்துக் கொள்வோம். படங்கள் பண்ணாத காலகட்டத்தில் எல்லா மே 30ஆம் தேதியும் என்னை அவரது வீட்டிற்கு அழைத்து விடுவார்.
அன்றைய தினத்தில் அவரது மனைவிக்கும் பிறந்த நாள், எனக்கும் பிறந்த நாள் அப்போது எனக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்வார்.
ஒருமுறை நான் பாலியில் இருந்தபோது எனக்கு போன் செய்தார் பேசிக்கொண்டு இருந்தோம். அதன் பின்னர் நான் ஹைதராபாத் வரவேண்டியிருந்தது. நான் விமான நிலையத்தில் இறங்கிய பின்னர் பார்க்கிறேன், அவரது போனில் இருந்து மிஸ்டு கால் வந்திருந்தது. நான் அவருக்கு தொடர்பு கொண்டேன், ஆனால் ரீச் ஆகவில்லை.

அதன் பின்னர் நானும் மறந்துவிட்டேன், ஒரு 10 நாள்களுக்குப் பின்னர் அவரது எண்ணில் இருந்து அவரது மறைவுச் செய்தி வந்தது. இந்த தகவல் எனக்கு வந்ததும், அடுத்த 10 நிமிடத்தில் கமல் சார் எனக்கு போன் செய்தார். ஒரு மணி நேரம் கிரேஸி மோகன் சார் குறித்து பேசினார்” என்று கிரேஸி மோகன் குறித்து பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…