
புதுடெல்லி: டெல்லில் இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், வீடு ஒன்றின் சுவர் இடிந்து விழுந்தததில் தாய் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டன, சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நான்கு பேர் உயிரிழப்பு குறித்து டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், “நஜாஃப்கார்க்கில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக காலை 5.25 மணிக்கு எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. மீட்பு பணிகளுக்காக பல குழுக்களை நாங்கள் அனுப்பி வைத்தோம். இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் சென்றோம். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நான்கு பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாங்கள் போலீஸாருக்கு தெரிவித்துள்ளோம்.” என்றார்.