
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, ஈக்காடுகண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களிலிருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் செல்லும் கனரக வாகன போக்குவரத்தால் நெருக்கடி ஏற்படுகிறது. இதனை குறைப்பதற்கு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், தெற்குப் பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க தமிழக அரசால் திட்டமிட்டப்பட்டது.