
‘பஞ்சாப் வெற்றி!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. போட்டிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
‘ஸ்ரேயாஷ் விளக்கம்!’
அவர் பேசியதாவது, ‘சேஸ் செய்வது எனக்கு எப்போதுமே பிடிக்கும். பெரிய டார்கெட்களை சேஸ் செய்யும் போது என் மீது கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர்ந்து ஆடுகிறேன். பெரிய டார்கெட்டாக இருந்தால் உள்ளூர் மைதானம் வெளியூர் மைதானம் என்ற வேறுபாடெல்லாம் இல்லை.
நான் களத்தில் நின்றால் என்னால் போட்டியை வென்று கொடுக்க முடியும் என தெரியும். இதற்காக வலையில் அதிகமாக பயிற்சி செய்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக புதிய பந்தில் அதிகம் ஆடுகிறேன். அதன் பலன்தான் இது. இன்று நான் களத்துக்குள் வரும்போது கொஞ்சம் பார்த்து நின்று ஆட நினைத்தேன்.

முதல் 10 பந்துகளுக்கு நேரம் எடுத்துக்கொண்டேன். அதன்பிறகு அட்டாக் செய்ய தொடங்கினேன். இடையில் ரிக்கி பாண்டிங் ஒரு மெசேஜை சொன்னார். போட்டியை கடைசி வரை கொண்டு செல்லாமல் சீக்கிரம் முடிக்க சொன்னார். சென்னை அணியில் கலீல் அஹமது, பதிரனா போன்ற சிறந்த டெத் பௌலர்கள் இருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எங்களின் பேட்டிங்கை நம்பி அவர்களின் சிறந்த பௌலர்களை அட்டாக் செய்வதுதான் எங்களின் திட்டம்.’ என்றார்.