
சென்னை: பிஹார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது என்று சந்தேகப் பார்வையை முன்வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடலின் வழியே சமூக நீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் தேவையான சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தவிர்க்கவும் தாமதிக்கவும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றதால், ஒரு வழியாக மத்திய பாஜக அரசு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.