
உங்கள் ராசிக்கு (வாக்கிய பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 10-ம் இடத்திலும் கேது பகவான் 4-ம் இடத்திலும் அமர்ந்து பலன் தருகிறார்கள். இந்த ராகு, கேது பெயர்ச்சியானது, தளராத முயற்சிகளில் உங்களை ஈடுபட வைத்து பூரண மான வெற்றியைப் பெற்றுத் தரும்.
ராகு பகவான் தரும் பலன்கள்
1. ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரவுள்ளதால், உங்களில் பலரும் புதுத்தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. பெரிய பதவிகளும் சமூகத்தில் கெளரவ பொறுப்புகளும் தேடி வரும். தொட்ட காரியங்கள் வெற்றி அடையும்.
2. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். ராகு உங்களைச் சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாயகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.
3. மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உழைப்புக்கான பலனை அடைவீர்கள். குலதெய்வத்தை மறக்காதீர்கள்.
4. கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள். படபடப்பு, டென்ஷன் விலகும்.
5. வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களே! புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு.
கேது பகவான் தரும் பலன்கள்
6. கேது 4-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். அவர் கேந்திரபலம் பெறுவதால் நற்பலன்களே வாய்க்கும். இதுவரையிலும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு அமைய வாய்ப்பு உண்டாகும்.சிலர் வண்டி, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். எனினும் இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்துவிடுங்கள். அம்மாவின் ஆரோக்கியத் தில் அக்கறை காட்டுவது அவசியம். வீட்டில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
7 பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். மகனை படிப்பு-வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். ஆன்மிகத்தில் மனம் செல்லும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

8. கேதுவின் சஞ்சாரப்படி, வியாபாரத்தில் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.
9. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம் பஞ்ச லிங்கேஸ்வரர் திருக்கோயில். ஒருமுறை, இங்கு சென்று, பஞ்சபூத வடிவங்களாக தனித்தனி சந்நிதிகளில் அருளும் சிவனாரை வணங்கி வாருங்கள்; நன்மைகள் நடக்கும்.