
சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 1.24 லட்சம் முன்னாள் படை வீரர்களும், 57,921கைம் பெண்களும் வசித்து வருகின்றனர். அவர்களுடைய மறுவாழ்வுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் வீர தீர செயல்களில் பதக்கம் பெற்ற 25பேருக்கு ரூ.13.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.