
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 50 வயதான காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆன்லைன் வர்த்தகம் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரின் வாட்ஸ் அப்பிற்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரபல தொழிலதிபர் ரிலையன்ஸ் அம்பானி ஆகியோர் ஆன்லைன் முதலீடு குறித்து பேசும் வீடியோ காட்சியைப் பார்த்த அவர் அந்த லிங்கில் இ- மெயில் ஐடியைப் பகிர்ந்திருக்கிறார்.
சிறிது நேரத்திலேயே அவரைத் தொடர்பு கொண்ட நபர்கள் சிலர், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் இந்த முதலீட்டில் அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அதனை நம்பி புதிதாக பிஸினஸ் அக்கவுண்ட் ஒன்றை ஓப்பன் செய்து பல தவணைகளாக 33 லட்சம் ரூபாயை செலுத்தியிருக்கிறார். செலுத்திய தொகையை இரட்டிப்பாக திரும்ப கேட்டபோது மழுப்பலான பதில்கள் வந்திருக்கிறது. ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நபர், சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோசடி பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், ”
குவாண்டம் ஏ.ஐ மோசடி எனப்படும் இந்த வகையான மோசடியில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோவை உருவாக்கிய மோசடி கும்பல், அந்த லிங்க் மூலம் இந்த நபரின் விவரங்களைப் பெற்றிருக்கிறார்கள். இரட்டிப்பு லாப ஆசை, டாலரில் முதலீடு, கிரிப்டோ கரன்சி, செபி, ரிசர்வ் வங்கி, முதலீட்டு வரி , பாதுகாப்பு வரி என ஏதேதோ பொய்களைச் சொல்லி மொத்தம் ரூ. 33,10,472 தொகையை வங்கி பரிவர்த்தனைகள் மூலம் பறித்துள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆன்லைன் நிதி மோசடிகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பேராசையால் பலரும் பணத்தை இழந்து வருகிறார்கள் ” என்றனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
