
மாம்பழத்தை பழங்களின் அரசன் என வழங்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் சுவை உலகம் முழுவதும் மக்களை ஈர்ப்பது மட்டும் அதற்கு காரணம் அல்ல.
பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் தன்னை சிறந்த பழமாக மா நிலைநிறுத்திக்கொண்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
மரத்தில் காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் அடையாளம் தெரியாமல் மறைந்துகொண்டிருக்கும். உண்பதற்கு சுவையாக இல்லாமல் துவர்ப்பாக இருக்கும். இதனால் பறவைகளும், விலங்குகளும் அதனை கண்டு கொள்ளாது.
இந்த நேரத்தில் உள்ளுக்குள் இருக்கும் விதை நன்றாக வளர்ந்து, முளைப்பதற்கு தகுந்தபடி வளரும். விதை முழுவதுமாக வளர்ச்சியடைந்த உடன், ஒருவித மணத்தை வெளியிடும்.
பச்சை இலைகளுக்கு மத்தியில் அதன் மஞ்சள் நிறத்தை, லேசான நிறக்குருடு உள்ள விலங்கள் கூட எளிதாக கண்டுகொள்ளும். மிக முக்கியமாக அதன் இனிப்புச் சுவை விலங்குகளைத் தேடி தேடி உண்ண வைத்து மரம் பரவலாக வளர உதவும்.
மாம்பழ விஷயத்தில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது. அதனால் ஜப்பானில் விளையும் மியாசகி மாம்பழ ரகம் கூட உத்தரபிரதேசத்தில் பயிரிடப்படுகிறது!
மாம்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகும். உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான, ஏன் நம் சூப்பர் மார்கெட்களுக்கு விற்பனைக்கு வராத, நாம் அடையாளம் காணாத எத்தனையோ வகைகள் இருக்கலாம் என்கின்றனர்.
பழமாக மட்டுமல்லாமல், ஊறுகாயாக, சட்னியாக, மாம்பழ சாதமாக என பலவகையில் நாம் உண்டு வருகிறோம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. மாம்பழம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களைக் காணலாம்…
நூற்றுக்கணக்கான மாம்பழ வகைகள்…
முன்னரே கூறியது போல நூற்றுக்கணக்கான மாம்பழ வகைகள் உள்ளன. சில ஒரே பிராந்தியத்தில் வளருபவை, சில வெவ்வேறு நாடுகளில் வளருபவை.
சில மாம்பழங்கள் இனிப்பாக கிரீமியாக இருக்கும். சில சிட்ரஸ் பழங்களைப் போலவும் சில அன்னாசிப்பழ சுவையுடனும் இருக்கும். எல்லா மாம்பழங்களும் வணிக ரீதியில் லாபம் தருவதில்லை, பொதுவாக இனிப்பு சுவை கொண்ட மாம்பழங்கள் மார்க்கெட்டில் வரவேற்பைப் பெறுகின்றன.
ஒரு சிறப்பான வாழ்க்கை என்பதை தேடித் தேடி சுவைத்தறிந்த மாம்பழ சுவைகளால் அளக்கலாம்!
தேசிய பழம்
இந்தியாவின் தேசிய பழம் மா என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் மாம்பழம் தான் தேசிய பழம்.
தமிழ் மேங்கோ
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மேங்கோ என்ற சொல், மாங்காய் என்ற தமிழ் சொல்லில் இருந்து அல்லது மாங்கா என்ற மலையாள சொல்லில் இருந்து தோன்றியிருக்கிறது.
15, 16-ம் நூற்றாண்டுகளில் பிரிட்டீஷ்காரர்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்யத் தொடங்கியபோது இந்த பெயர் தோன்றியிருக்கிறது.
ஆண்டுக்கு 4.3 கோடி டன் உற்பத்தி
உலகம் முழுவதும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் டாப் 10 பழங்களில் மாம்பழமும் ஒன்று. இதில் பெரும்பாலும் Tommy Atkins mango என்ற விரைவாக வளரும் வகைதான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது அளவில் பெரியதாகவும், ஈர்க்கும் செந்நிறத்திலும் வளரும். பல வகையான பூஞ்சைகளின் தொற்றுக்கு எதிர்ப்புதிறன் கொண்டுள்ளது, சூப்பர் மார்கெட் அலமாரிகளில் நீண்ட நாள்கள் இருக்கும்.
இதனால் இந்த பழத்தை உற்பத்தில் செய்து பல நாடுகளுக்கு அனுப்ப எளிதாக இருக்கிறது. ஆனால் இந்த பழங்கள்தான் நார் தன்மை கொண்டதாகவும் பிற மாம்பழங்களை விட சுவை குறைவானதாகவும் இருக்கின்றன.
இந்திய மாம்பழங்கள்
உலகம் முழுவதுமிருந்து மாம்பழம் விளையாத இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு மாம்பழம் அனுப்பப்படுகிறது. உலகில் அதிக மாம்பழம் விளைவிக்கும் நாடாக இந்தியா இருக்கிறது.
தெற்காசிய நாடுகள் இணைந்து 1.8 கோடி டன் மாம்பழங்களை உற்பத்தி செய்கின்றன.
மாம்பழங்களின் தாய்நாடு
முதன்முதலாக காட்டு மாம்பழங்கள் இமாலய மலைத்தொடரின் கீழ் இந்தியா – மியான்மர் பகுதிகளில் தோன்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் மாம்பழங்களை பயிரிட்டு விளைவிக்கும் பழக்கம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் தோன்றியிருக்கிறது. மியான்மரிலும், அந்தமான் தீவுகளிலும் ஆதி காலத்திலேயே மாம்பழங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
300 வயதான மாமரம்
மாம்பழங்கள் அதன் நீண்ட வாழ்நாளுக்காக அறியப்படுவதில்லை என்றாலும், பொதுவாக 40 முதல் 60 ஆண்டுகள் விளைச்சல் தரும்.
நாம் கண்டறிந்ததிலேயே பழமையான மாமரம் மத்திய இந்தியாவில் கிழக்கு கந்தேஷ் பகுதியில் உள்ளது. இது 300 வயதிலும் பழங்களை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது!
உலகிலேயே கனமான மாம்பழம்
சாதாரணமாக ஒரு மாம்பழம் அதன் வகையைப் பொருத்து 140 கிராம் முதல் 2 கிலோ வரை இருக்கும்.
உலகிலேயே மிகவும் கனமான மாம்பழம், 3.435 கிலோ எடை கொண்டது என கின்னஸ் சாதனை புத்தகம் தெரிவிக்கிறது. இது 49.52 செ.மீ நீளமும், 49.53 செ.மீ சுற்றளவும், 17.78 செ.மீ அகலமும் கொண்டது.
பிலிப்பைன்ஸில் ஒரு தம்பதியின் வீட்டும் முன்தோட்டத்தில் வளர்ந்துள்ளது.
பௌத்தர்களின் புனித பழம்
புத்தரும் அவரது சீடர்களான சக துறவிகளும் அமைதியான மாந்தோப்புகளில் அமர்ந்து தியானம் செய்ததாக கூறப்படுவதனால், பௌத்த மதத்தில் மாமரம் புனிதமானதாகக் கூறப்படுகிறது.
மாம்பழம் சாப்பிடுவது நல்லதா?
சமீபகாலமாக எழுந்திருக்கும் மிக முக்கிய கேள்வி இது. இனிப்பான பழங்கள் குறிப்பாக சீசன் பழங்களை சாப்பிடும்போது இந்த கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.
ஒரு கப் மாம்பழத்தில் 60 மில்லிகிராம் வைட்டமின் சி இருக்கிறது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மைய்யம், ஒரு நாளுக்கு ஒரு வளர்ந்த நபருக்கு 40 மில்லி கிராம் வைட்டமின் சி தேவை என்கின்றது.
இதுமட்டுமல்லாமல், மாம்பழங்களில் இருபதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வைட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. இவற்றில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஃபோலேட் – நார்ச்சத்து போன்றவை முக்கியமானவை.
அளவுக்கு மீறாமல் இருக்கும்போது, குற்ற உணர்ச்சி இல்லாமல் சாப்பிடலாம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடலாம்.
மாம்பழம் சாப்பிடுவது நல்லதா என்பதில் இன்னும் விவரங்கள் அடங்கிய கட்டுரை வேண்டுமென்றால் கமண்டில் தெரிவியுங்கள்!