
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். எப்போது, எங்கு, எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம் என்றும், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படலாம் என்றும் இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.