
நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி ரேஸிங் பக்கமும் தற்போது பரபரப்பாக களமாடி வருகிறார்.
இவருடைய இந்த பன்முகத்தன்மையைப் பாராட்டும் வகையில் இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 28, 2025) குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விருதை அஜித் பெற்றுக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலரையும் கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அஜித்தோடு, நடிகர் பாலைய்யா, கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்பட பலரும் இந்த விழாவில் பத்ம விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் நடிகர்கள் பலரும் இந்த பத்ம விருதுகளை பெற்றிருக்கிறார்கள்.
அந்த நடிகர்கள் யார் என்ற விவரத்தைப் பார்ப்போம்.
சிவாஜி கணேசன்:
நடிகர் சிவாஜி கணேசன்தான் பத்ம விருது பெற்ற முதல் தமிழ் நடிகர். தமிழ் நடிகராக தேசிய அளவில் அப்போதே பல அங்கீகாரங்களை பெற்றார் சிவாஜி.
இப்படி சினிமாவுக்கு அவர் கொடுத்த அபரிமிதமான உழைப்பைப் பாராட்டி 1966-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 1984-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதை இவர் பெற்றார்.
எம்.கே. ராதா:
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இயங்கி வந்தவர் நடிகர் எம்.கே. ராதா. எஸ்.எஸ். வாசன் இயக்கிய ‘சந்திரலேகா’ திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து பல்வேறு தேசப்பற்று மிக்க கதாபாத்திரங்களில் நடித்த இவரை கெளரவிக்கும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு இவருக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த்:
ரஜினிகாந்த் சினிமாவுக்கு ஆற்றியிருக்கும் அளப்பரிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருதும், பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நான்கு தசாப்தங்களாக சினிமாவில் ஜொலித்து பலருக்கு ஊக்களிப்பவராக ரஜினி இருப்பதை பாராட்டும் வகையில் 2016-ம் ஆண்டு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
கமல்ஹாசன்:
கமல்ஹாசனின் பன்முகத் தன்மையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஶ்ரீ விருதும், பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 1990-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார்.
ஜெமினி கணேசன்:
ஹீரோயிசம் சார்ந்த கதாபாத்திரங்களில் மற்ற உச்ச நடிகர்கள் அப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்க, காதல் கதைகளை தேர்வு செய்து அதில் வெற்றிக் கண்டவர் ஜெமினி கணேசன்.
ஜெமினி கணேசன் சினிமாவுக்கு கொடுத்த உழைப்பைப் பாராட்டி இவருக்கு 1971-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
விவேக்:
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு கடந்த 2009-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டிருந்தது.
சினிமாவில் நகைச்சுவை வசனங்களில் சில சமூகத்துக்கு தேவையான கருத்துகளை சேர்த்துப் பேசுவது இவருடைய ட்ரேட்மார்க் ஸ்டைல்.
இந்த விஷயத்தைப் பாராட்டும் வகையில் இவருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது.

பிரபு தேவா:
‘இந்தியன் மைக்கேல் ஜாக்சன்’ என்றழைக்கப்படும் பிரபு தேவா சினிமாவுக்கும் நடனத்துக்கும் கொடுத்த பங்களிப்பை பாராட்டி கெளரவிக்கும் வகையில் பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை 2019-ம் ஆண்டு பெற்றார்.
விஜயகாந்த்:
சினிமா, அரசியல் என இருப் பக்கங்களிலும் விஜயகாந்த் செலுத்திய பங்களிப்பை பாராட்டி கெளரவிக்கும் வகையில் கடந்த 2024-ம் ஆண்டு விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.