
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அதில் குறுகிய கால விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் உடனே நாட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் தங்களது நாட்டிற்கு செல்ல தயாராகி வருகின்றனர். மகாராஷ்டிராவில் மட்டும் மொத்தம் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்களில் 1000 பேர் குறுகிய கால விசாவில் இந்தியாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இன்றைக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மாநில அமைச்சர் யோகேஷ் கதம் அளித்த பேட்டியில், ”மகாராஷ்டிராவில் 4 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நீண்ட கால விசாவில் வசிக்கின்றனர். ஆயிரம் பாகிஸ்தானியர்கள் மருத்துவம், தொழில், படப்பிடிப்பு போன்ற காரணங்களுக்காக குறுகிய கால விசாவில் வந்திருக்கின்றனர். அவர்கள் உடனே மகாராஷ்டிராவில் இருந்து காலி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவ விசாவில் வந்திருப்பவர்கள் மட்டும் தாமதமாக நாட்டை விட்டு வெளியேற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது”என்றார்.

இது குறித்து மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,”மகாராஷ்டிராவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை நாடு கடத்த தேவையான நடவடிக்கைகள் தொடங்கி விட்டது. காலக்கெடு முடிந்த பிறகு நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முன்னதாக காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த புனேயைச் சேர்ந்த இரண்டு பேர் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். காஷ்மீர் தாக்குதலில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மட்டுமல்லாது நாடு முழுவதும் குறுகியகால விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் இன்றைக்குள் நாட்டை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
