
புதுடெல்லி: தமிழகத்தின் தென்காசி மாவட்ட கடையநல்லூரை சேர்ந்த சுப்பையா – மலையம்மாள் தம்பதியின் மூத்த மகன் எஸ்.ராஜலிங்கம். திருச்சி என்ஐடி.யில் வேதியல் பிரிவில் 2003-ல் பட்டம் பெற்றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.யின் அலிகரில் பணியை தொடங்கினார். பின்னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரிவிலேயே பணியில் சேர்ந்தார். ஐஏஎஸ் பணியில் அவுரய்யா, சோன்பத்ரா, குஷி நகர் மற்றும் சுல்தான்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார்.
கடந்த நவம்பர் 2022-ல் வாராணசியின் 58-வது ஆட்சியராக ராஜலிங்கத்தை முதல்வர் ஆதித்யநாத் நியமித்தார். இந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்டரை ஆண்டு வாராணசி நிர்வாகத்தில் 3 காசி தமிழ்ச் சங்கமங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் உத்தரவின் பேரில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் ராஜலிங்கம் அமல்படுத்தினார். இதனால், பிரதமர் மோடியின் அபிமானத்தை பெற்றார். பின்னர் பிரதமர் மோடி நேரடியாகவும் வீடியோ கான்பரன்சிங் கூட்டங்களிலும், ‘மிஸ்டர் ராஜலிங்கம்’ என்று பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டார்.