
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குன்னத்துகால் பகுதியைச் சேர்ந்த ஷாகா குமாரி, நெய்யாற்றின்கரை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்,52 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த அருண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது காதலாக மலர்ந்தது. அதியனூரைச் சேர்ந்த அருணுக்கு வயது 27.
2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
தன்னைவிட சுமார் 25 வயது அதிகமுள்ள பெண்ணாக இருந்தபோதும் பணத்துக்கு ஆசைப்பட்டு அருண் திருமணம் செய்துள்ளார் . இதனால், திருமணம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக தனது நெருங்கிய ஒரு நண்பனை மட்டும் அழைத்துச் சென்று எளிமையாக திருமணம் செய்திருக்கிறார் அருண்.
திருமணத்தின் போது ஷாகா குமாரியின் வீட்டார் 50 லட்சம் ரூபாயும் 100 பவுன் நகைகளும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
அதே சமயம் திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என ஷாகாகுமாரியிடம் அருண் கூறியிருக்கிறார். ஆனால் ஷாகா குமாரி தனது உறவினர்களுக்கு திருமண போட்டோக்களை அனுப்பியுள்ளார். அவர்கள் சமூக வலைத்தளங்களில் திருமண போட்டோக்களை பகிர்ந்துள்ளனர்.

இதையடுத்து அருணின் பிற நண்பர்களுக்கு திருமணம் குறித்து தெரியவந்ததால் வயதுக்கு அதிகமான பெண்ணை திருமணம் செய்ததாக கிண்டல் செய்துள்ளனர்.
இதற்கிடையே அருண் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என தனது ஆசையை கூறியுள்ளார் ஷாகா குமாரி. இது அருணுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை அடுத்து ஷாகா குமாரியை கொலைச் செய்ய திட்டமிட்டார் அருண். 2020-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி, அருண் தனது வீட்டில் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
நண்பர்கள் சென்ற பிறகு ஷாகா குமாரியின் கழுத்தை நெரித்துள்ளார். ஷாகாகுமாரி மயங்கியதும் மின்சாரம் பாய்ச்சி அவரை கொலை செய்துள்ளார்.
அவர் இறந்தநிலையில், மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்பவைப்பதற்காக அலங்கார சீரியல் லைட்டுகளை ஷாகா குமாரி உடல்மீது சுற்றிவைத்துள்ளார் அருண்.

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியினர் கூறியதை அடுத்தே போலீஸார் விசாரணை நடத்தி ஷாகாகுமாரி கொலை செய்யப்பட்டதை உறுதிசெய்தனர். இதையடுத்து அருண் கைதுசெய்யப்படார்.
அருண் சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னைவிட சுமார் 25 வயது அதிகமான பெண்ணை காதலித்து, பெற்றோருக்கு கூட தெரியாமல் திருமணம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு நெய்யாற்றின்கரை அடிஷனல் டிஸ்ட்ரிக் கோர்டில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த கோர்ட் அருணுக்கு ஆயுள்தண்டனை விதித்ததுடன் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.