
கோவையில் நடிகர் விஜய் பயணித்த கேரவன் கதவுகளை ரசிகர்கள் முண்டியடித்து நெருங்கும் முயற்சியில் சேதமானதால், தவெக பூத் கமிட்டி மாநாட்டுத் திடலுக்கு செல்ல மாற்று வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.
கோவை வந்த விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இன்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் கருப்பு நிற ஃபார்ச்சூனர் காரில் விடுதியிலிருந்து புறப்பட்டார்.
விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, அவர் பயணித்த கேரவன் வாகனத்தின் கதவுகளை ரசிகர்கள் முண்டியடித்து நெருங்கும் முயற்சியில் சேதமானதால், மாற்று வாகனத்தில் பயணித்தார்.
ரோடு ஷோ
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார். மாலை 5 மணியளவில் மாநாட்டு வளாகத்தை அடைந்தார். மாநாடு இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதால், அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
விஜய்யின் வருகை அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

கட்சி துண்டு.. செல்போனுக்கு தடை!
பூத் கமிட்டி கருத்தரங்கம் கல்லூரியில் நடைபெறுவதால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு கட்சி துண்டு மற்றும் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. நுழைவு வாயில் முன்பே கட்சி துண்டை வாங்கி வருகின்றனர்.
தொண்டர்கள் கொந்தளிப்பு
இதற்கிடையில் தவெக மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று இடத்திற்கு பாஸ் உள்ள நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டது. ஆனால் பாஸ் உள்ள பலரும் கூட்டம் நிரம்பிவிட்டதாக சொல்லி அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களை உள்ளே அனுமதிக்க சொல்லி கோஷம் எழுப்பி வருகின்றனர்.இதனால் மூடப்பட்ட கேட் அருகே கடும் நெரிசல் ஏற்பட்டது. விஜய் மைக் பிடித்தி தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டி இருந்தது.