
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.
கடந்த 1996 – 2001 மற்றும் 2006 – 2011 தி.மு.க ஆட்சியில் அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முன்பு வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்குச் சென்றது. இதில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதையடுத்து, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பு, “குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி” என்று வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்துப் பிறப்பித்த கடலூர் நீதிமன்றம் உத்தரவை ரத்துசெய்தார். மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்து, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்குமாறும், கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கடந்த இரண்டு நாள்களில் அமைச்சர் துரைமுருகன் மீதான இரண்டு சொத்து குவிப்பு வழக்குகளில் அவரை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிப்பிடத்தக்கது.