
பஹல்காமில் குதிரை சவாரியை தவிர்த்ததால் உயிர் தப்பினோம் என்று கேரளாவில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் கூறினர். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காமுக்கு கேரளாவில் இருந்து 23 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா சென்றிருந்தனர். தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய இவர்கள் டெல்லி திரும்பி, கேரள இல்லத்தில் தங்கியுள்ளனர்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள பெண் ஒருவர் கூறியதாவது: சம்பவ நாளில் பஹல்காமில் இருந்த நாங்கள் முதலில் பைசரன் பள்ளத்தாக்கு செல்ல திட்டமிட்டோம். ஆனால் குதிரை சவாரிக்கான கட்டணம் அதிகமாக இருந்ததால் அங்கு செல்வதை தவிர்த்துவிட்டு வேறொரு இடத்துக்கு சென்றோம். பிறகு நாங்கள் மீண்டும் பைசரன் நோக்கி செல்லும்போது உரத்த சப்தங்களை கேட்டோம். கடைகள் மூடப்பட்டிருந்தன. மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.