
புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இதனிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் செயலாளர் தேவஸ்ரீ முகர்ஜீ, இந்திய அரசின் முடிவு குறித்து பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சைது அலி முர்தாஷாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் மாற்றங்களுக்கான அறிவிப்பை இந்தியா தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.