
சென்னை: சென்னை செனாய் நகர் பகுதியில், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும், என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம். அந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, தற்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது.